கோவை அருகே மின் கம்பத்தை மாற்றி அமைக்க ரூ 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் கையும் களவுமாக கைது

கோவை ஜூன் 18 திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் பிரபு (வயது 36) இவருடைய தந்தை கருணாகரன். இவருக்கு சொந்தமான 99 சென்ட் நிலம் கோவை நீலாம்பூர் அருகே உள்ள முதலி பாளையத்தில் உள்ளது. அந்த பகுதியில் குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்கம்பங்கள் உள்ளன. அதில் ஒரு மின்கம்பம் கருணாகரனின் நிலத்தின் மையப் பகுதியில் உள்ளது. அதை நிலத்தின் ஓரத்தில் மாற்றி அமைக்கும் படி குரும்பபாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு செந்தில் பிரபு சென்று விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் மின்கம்பத்தை மாற்றி அமைக்க ரூ 50, ஆயிரத்துக்கு மேல் செலவாகும் என்று மதிப்பீடு செய்தனர். இதையடுத்து ரூ 50 ஆயிரத்துக்கும் அதிகமாக மதிப்பீடு வருவதால் மின்வாரிய செயற்பொறியாளர் தான் அனுமதி கொடுக்க வேண்டும். எனவே நீங்கள் சோமனூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் செயற் பொறியாளரை சந்தித்து அனுமதி பெறுங்கள் என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 9 – ந் தேதி செந்தில் பிரபு தனது தந்தை கருணாகரனுடன் சோமனூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று செயற்பொறியாளர் சபரி ராஜனை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து அதிகாரிகளும் முதலி பாளையத்தில் மாற்றி அமைக்க வேண்டிய மின்கம்பத்தை வந்து ஆய்வு செய்து விட்டு சென்றனர். இந்த நிலையில் சோமனூர் மின்வாரிய அதிகாரிகள் கருணாகரனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மின்கம்பத்தை மாற்றி அமைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை அங்கீகரிக்க செயற்பொறியாளருக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத கருணாகரன் இது தொடர்பாக தனது மகனிடம் தெரிவித்தார் உடனே அவர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் .இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்மின்வாரிய செயற்பொறியாளரை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர் .அதன்படி அவர்கள் ரூ.20 ஆயிரத்துக்கு இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்தில் பிரபுவிடம் கொடுத்தனர் ..அந்த பணத்தை பெற்றுக் கொண்ட அவர் தனது தந்தை யுடன் நேற்று சோமனூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர்கள் 2 பேரும் செயற்பொறியாளர் சபரிராஜனை சந்தித்து ரசாயனம் தடவிய ரூ 20 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தனர் .அதை அவர் வாங்கி தனது மேஜை டிராயரை திறந்து உள்ளே வைத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார் சபரி ராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் பெற்ற லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..