அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் நகை திருட்டு

கோவை ஜூன் 28 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இந்த நிலையில் வெளி நோயாளிகள் பிரிவு பகுதியில் நேற்று கோட்டூர் ரோட்டை சேர்ந்த சுபத்ரா (வயது65) என்பவர் சிகிச்சை பெற நின்று கொண்டிருந்தார். அவர் தனியாக நிற்பதை பார்த்த மர்ம ஆசாமி ஒருவர் அருகில் சென்று பேச்சு கொடுத்தார். அப்போது கட்டிடத்தின் மேல் தளத்தில் முதியோருக்கு தங்க கம்மல் கொடுக்கிறார்கள் என்று ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய சுபத்ரா அந்த நபருடன் லிப்டில் மேல் தளத்திற்கு சென்றார். அங்கு அந்த நபர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சுபத்ராவை அழைத்துச் சென்றார். பின்னர் வேறு நகைகளை அணிந்து இருந்தால் தங்கக் கம்மல் கொடுக்க மாட்டார்கள் .எனவே உங்கள் கழுத்தில் கிடக்கும் தங்க நகைகளை கழற்றி கையில் வைத்து விடுங்கள் .என்று சுபத்ராவிடம் அந்த நபர் கூறினார். இதை நம்பி கழுத்தில் கடந்த 3பவுன் நகையை சுபத்ரா கழற்றிய பிறகு அதை தனது கையில் வாங்கி தங்க நகையா? பித்தளை நகையா? என்று கூறி பார்ப்பது போன்று அந்த நபர் நடித்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையுடன் தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபத்ரா சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்தனர். அதற்குள் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகிறார்கள். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் முதாட்டியிடம்நடந்த இந்த நூதன மோசடி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.