சரக்கு வாகனம் மோதி தாய் கண் முன் பள்ளிக்கூட மாணவி பலி

கோவை ஜூன் 28 கோவையை அடுத்த கோவை புதூர் பக்கம் உள்ள திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சாவித்திரி. இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு காவியா மற்றும் சவுமியா (வயது 13) உட்பட 3 மகள்கள் இருந்தனர் .இதில் சவுமியா உக்கடம் , கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார் .சாவித்திரி தினமும் காலையில் தனது மகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு மாலையில் அவரை வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி அவர் நேற்று முன்தினம் காலையில் தனது மகளை பள்ளிகூடத்தில் விட்டார் .பின்னர் மாலையில் அவரை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வீட்டுக்கு செல்வதற்காக தனது மகளுடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் சவுமியா மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சவுமியா இழுத்துச் செல்லப்பட்டார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கம் உள்ளவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் சவுமியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் பலியான சவுமியாவின் அக்காள் காவியாவின் கணவர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் தனது நண்பர் கண்ணன் என்பவருக்கு வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்ததும், ஓட்டுனர் உரிமம் இல்லாத கண்ணன் அந்த சரக்கு வாகனத்தை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதும், அப்போது 2 பேருமே மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது .இதை யடுத்து அந்த சரக்கு வாகனத்தின் உரிமையாளரான ராஜேந்திரன், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஒட்டிய கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.