வீட்டில் 5 அடி உயர கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

கோவை செப்டம்பர் 4 கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் இவரது மகன் பார்த்திபன் ( வயது 26) இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் வசித்து வருகிறார் .இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்பனை செய்து வருவதாக அன்னூர் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்து அன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பார்த்திபன் 5 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர் பல இடங்களில் கஞ்சா விதைகளை தூவி கஞ்சா வளர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது .இதையடுத்து கஞ்சா செடியை புடுங்கி எடுத்தனர். மேலும் கஞ்சா செடிகள் வளர்ப்பதற்காக வைத்திருந்த விதைகளையும், ஒரு கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.