பா.ம.க கவுரவ தலைவராக இருக்கும் ஜி.கே.மணி கட்சி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையே அதிகாரப்போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது காரசாரமான விவாரதமும், மோதல்களும் அதிகரித்து வருகிறது. இதில் அன்புமணி தரப்பில் உள்ளவர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் தரப்பில் உள்ளவர்களை அன்புமணி நீக்குவதும், இருவரும் பா.ம.க.வுக்கு புதிய நிர்வாகிகளை தங்களது தரப்பில் நியமிப்பதும் என பரபரப்பான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ராமதாஸ் தரப்பில் இருக்கும் பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே.மணி கட்சிக்கு எதிராக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது,
இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-ன் படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025-ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-ன் படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்திருக்கிறார்கள்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடிக்க தொடங்கியதில் இருந்து ராமதாஸ் பக்கம் நிற்கும் ஜி.கே.மணி தற்போது நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,








