திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும்.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு தங்க தகடுகள் (100 கிலோ) பதிக்கப்பட்டன. தற்போது கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் விமான கோபுரத்தில் 50 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2022-23-ம் ஆண்டில் கோவிந்தராஜர் கோயில் விமான கோபுரத்தில் தங்க தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் 100 கிலோ தங்கத்தை வழங்கியது. 9 அடுக்கு தங்க தகடுகளை பதிக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய பரிசோதனையில் 2 அடுக்கு தங்க தகடுகள் மட்டுமே பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் தங்க தகடுகளை பொருத்தியபோது விமான கோபுரத்தில் இருந்த சுமார் 30 சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளன. அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான ஒய்.வி சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் இந்த விவகாரத்தை வெளியே வரவிடாமல் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது தங்கம் மாயமான விவகாரம் குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தங்க தகடுகள் பொருத்திய தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பரகாமணியில் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







