தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து பெண் போலீஸ் எஸ்.ஐ. மகன் பரிதாப சாவு

கோவை 24 கோவை போத்தனூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மனோன்மணி. இவரது மகன் பிரசாந்த் (வயது 34) இவர் பீளமேட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் சரவணம்பட்டியில் இருந்து தண்ணீர் டேங்கர் லாரி ஒன்றுஅவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு வந்தது. அந்த லாரியை வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்த ராமசாமி ( வயது 46 ) என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் தண்ணீர் டேங்கர் லாரி அந்த நிறுவனத்துக்குள் நுழைவதற்கு பிரசாந்த் வழிகாட்டிக் கொண்டிருந்தார். அதன் படி தண்ணீர்டேங்கர் லாரி அந்த நிறுவனத்திற்குள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் முன்னால் இருந்த நடைபாதை சிலாப்பின் மேல் லாரி ஏறியது. அந்த நேரத்தில் எதிர்பாரத விதமாக சிலாப் உடைந்தது. இதனால் லாரி அப்படியே கவிழ்ந்து முன்னால் வழிகாட்டி கொண்டிருந்த பிரசாந்த் மீது விழுந்தது .லாரிக்கு அடியில் சிக்கி அவர் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.விபத்தில் பலியான பிரசாந்த் போத்தனூர் எம்.ஜி.ஆர். நகரில் தனது மனைவி ரம்யாவுடன் வசித்து வந்தார்.இதுகுறித்து பீளமேடு போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து பலி ஏற்படுத்திய வெள்ளகிணறு, தந்தை பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமசாமி கைது செய்யப்பட்டார்.இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.