பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை.!!

தமிழக துணை முதல்வர் 48 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறந்த கல்வியாளர் சாதனை விருது வழங்கும் விழா நடைபெற்றது . இந்த விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வியாளர் அணி மாநில செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பங்கேற்று பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன .

இந்த நிகழ்வுக்கு பின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .அப்போது அவர் கூறுகையில்,பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக தான். மாணவர்கள் மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது.தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 9416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 7898 வகுப்பறைகள் கட்டி வருகிறோம்.பாழடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பள்ளிக்கூடங்களில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் சமுதாய கூடத்திலோ அல்லது வாடகை கட்டிடங்களிலோ மாணவர்கள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி நிதியை பெற வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய அரசு கல்வியில் 20 நோக்கத்தை அடைய வேண்டும் எனக் கூறுகிறார்கள். அதை நாம் 19 அடைந்து விட்டோம். கேரளா இருபதை அடைந்து விட்டது. ஆனால் இந்த இரு மாநிலங்களுக்கு தான் கல்வி நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறார்கள். கல்வியிலும் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. இருந்த போதும் முதலமைச்சர் கல்விக்கான நிதியை நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் அதை வழங்கி வருகிறார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பில் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார். நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார்.அரசு பள்ளிகளில் டெண்டர் விடுவது நடைமுறையில் உள்ளது. விரைவில் டெண்டர் விடப்படும். தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.

ஜாக்டோ ஜியோ ஜனவரி 6 ஆம் தேதி முதல் கால வரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளார்கள். ஜனவரி 6ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் தெரிவிப்பார்.மத்திய அரசு நமக்கான நிதி கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இருந்த போது அவர்களுக்காக நல்ல செய்தி நிச்சயம் வரும்.

திமுகவில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். மூத்தவர்களின் ஆலோசனைகளும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பேசி உள்ளார். இளைஞரணி செயலாளரான அவருக்கு இந்த உரிமை உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த பியூஸ் கோயல் வந்துள்ளார். அந்த கூட்டணி பலப்பட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்குமா என்கிற கேள்விக்கு, எங்களுக்கு போட்டியே திராவிட மாடல் 2.0-வில் நாங்கள் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தான். தற்போது மேற்கொள்ளும் திட்டங்களை காட்டிலும் அதில் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் போட்டியே என்றார்.

அடுத்து பேசிய எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் :நான் ஆண்டாள் வேடம் போட்டது ஒரு நடனத்திற்காக என்னை குறித்து அறிந்தவர்களுக்கு என்னை நன்றாக தெரியும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு பதில் எதுவும் கூற முடியாது என்றார்.