ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 65 வயது மூதாட்டி ஒருவரின் ஜாதியை குறிப்பிட்ட திட்டிய குற்றத்திற்காக கிணத்துக்கடவு பகுதியை  சேர்ந்த வேலுச்சாமி மகன் கனகராஜ் (வயது43) என்பவர் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில், இவ்வழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 3 நாட்களில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று 10-ந் தேதி முடிவு பெற்று குற்றவாளி கனகராஜ்க்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் முத்துராஜா ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் பாராட்டினார்.