பணம் கொடுக்காததால் பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன் கைது .

கோவை மே 6 கோவை சிட்கோ மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரங்கராஜ் இவரது மனைவி மனோன்மணி (வயது 79) இவரது மகன் முருகேசன் .இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும் சிவகுமார் ( வயது 25) விஷ்ணு (வயது 23) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். சிவகுமார் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கே. ஜி. சாவடி அருகே நடந்த விபத்தில் முருகேசன் உயிரிழந்தார் அதில் இழப்பீடு தொகையாக முருகேசன் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் கிடைத்தது. அதில் லட்சுமிக்கு ரூ.6 லட்சமும் 2, மகன்களுக்கு தலா ரூ 1 லட்சத்து 50 ஆயிரமும், பாட்டி மனோன்மணிக்கு ரூ.1 லட்சத்து50 ஆயிரமும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தனது பாட்டிக்கு கொடுத்த தொகை தனக்கு வேண்டும் என்று சிவக்குமார் வற்புறுத்தி வந்தார். அதற்கு மனோன்மணி எனக்கு கொடுத்த பணத்தை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் மனோன்மணி உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த சிவகுமார் தனது பாட்டியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நீ தனியாக தானே இருக்கிறாய்? உனக்கு வயதாகிவிட்டது அல்லவா? எனவே உனக்கு கிடைத்த ரூ 1 லட்சத்து 50 ஆயிரத்தை எனக்கு கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கேட்டுள்ளார் அதற்கு மனோன்மணி எனக்கு கிடைத்த பணத்தை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது பாட்டி என்று கூட பார்க்காமல் கோழியின் கழுத்தை அறுப்பது போல பாட்டியின் கழுத்தை அறுத்தார். இதனால் ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டி மனோன்மணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பேரன் சிவகுமாரை கைது செய்தனர்..பணத்துக்காக மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.