கோவையில் கடந்த 7 மாதங்களில் சாலைவிதிகளை மீறிய 2லட்சத்து 51 ஆயிரம் பேர் மீது வழக்கு

ரூ.6 கோடி அபராதம் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தகவல்.கோவை ஆகஸ்ட் 11 கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விபத்துக்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளை கண்டறிந்து அதில் விபத்து நடக்கும் பகுதி கவனமாக செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக ரோட்டில் குறியீடு வரையப்பட்டுள்ளன .இது தவிர இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் .கார்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது குறித்து சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அது போன்று போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக குடித்துவிட்டு வாகனங்கள் ஒட்டி வரும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கையும், குற்ற சம்பவங்களும் குறைந்துள்ளன. இதற்கு 24 மணி நேர ரோந்து திட்டம் மிகவும் கை கொடுத்துள்ளது. கோவையில் கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 174 விபத்துக்கள் நடந்துள்ளன .இதில் 176 பேர் உயிரிழந்து உள்ளனர். 634 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் .ஆனால் இந்த ஆண்டு விபத்துக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. விபத்துக்களை தடுக்க போக்குவரத்து போலீசாருடன், சட்ட ஒழுங்கு போலீசாரும்இணைந்து அபராதம் விதித்து வருகின்றனர் .அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை போக்குவரத்து விதிகளை மீறிய 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 6 கோடி அபராதம் தொகை வசூலிக்கப்பட்டு இருக்கிறது .விபத்துக்கள் நடப்பதை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் போக்குவரத்து விதிகளை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் கண்டிப்பாக விபத்து நடப்பதை தடுக்கலாம் இவர் அவர் கூறினார்.