கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, கோவை மாநகர பகுதியான சரவணம்பட்டி கீரணத்தம் ஐடி பார்க் அருகே, மூன்று காட்டு யானைகள் வந்தன. அங்குள்ள ஒரு குட்டையில் அவை உற்சாகமாக குளியல் போட்டன. வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அத்திப்பாளையம் பகுதியில் தற்போது, ஏழு மான்கள் கொண்ட கூட்டம் ஒன்று வழி தவறி வந்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து இவ்வளவு தூரம் மான்கள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் வருவது, அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடர் இடப்பெயர்வு குறித்து வன உயிரின ஆர்வலர்கள், பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் வேட்டையர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதா ? அவர்களிடம் இருந்து தப்பிக்க, உயிர் பயத்தில் விலங்குகள் ஊருக்குள் ஓடி வருகிறதா ? யானைகளின் பாரம்பரிய வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், அவை வழி மாறி மாநகரப் பகுதிக்குள் நுழைகிறதா ? காட்டில் உணவு இருந்தும், பயிர்களை தேடி அவை நாட்டை நோக்கி வருகிறதா ? கோவை மாவட்ட வனத்துறையினர் இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு, விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





