குழந்தைகள் தின விழா மற்றும் விதைப்பந்து தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா..!
என்.ஜி.ஓ.ஏ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் விதைப்பந்து தயாரித்த மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி.ஜெய மேரி தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி.புனிதா முன்னிலை வகித்தார். ஆசிரியை செலின் மேரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மணிமுத்தாறு பட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திகேயன் மற்றும் சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டு, விதைப்பந்துகள் தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
கமாண்டண்ட் கார்த்திகேயன் பேசும்போது, குறிக்கோளுடன் செயல்படுவது, கேள்வி ஞானம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதிப்பது, சாலை விதிகளை மதிப்பது, மரங்களைப் பாதுகாப்பது குறித்தும், மேலும் பல்வேறு திருக்குறள்களை மேற்கோள் காட்டி , அதன்படி செம்மையாக வாழ வேண்டும் என்று எடுத்துக் கூறினார். பேச்சின் இடையிடையே ஆர்வமாக பதிலளித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
சமூக ஆர்வலர் திருமாறன் பேசும்போது, ஒரு கோடி விதைப்பந்துகள் இலக்கு நோக்கி பயணிப்பது, அதில் மாணவ, மாணவியரின் பங்களிப்பு குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பயனுள்ள வகையில் நேரத்தை பயன்படுத்துவது, நேர மேலாண்மை குறித்தும்,எடுத்துக் கூறினார்.









