அமெரிக்க பெண்ணை கேரள முறைப்படி திருமணம்!

அமெரிக்க பெண்ணை காதலித்து கோவை இளைஞர் ஒருவர் பாரம்பரிய கலாச்சாரத்தில் மணம் முடித்துள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வாசுதேவன்,  அமெரிக்க நாட்டைச்  சேர்ந்த கரோலின் கஸாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன், இந்தியா வந்த இருவருக்கும், கோவை கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள ஹார்மனி. சம்மிட்  கன்வென்ஷன் அரங்கில் திருமணம் நடைபெற்றது.

வாசுதேவன் கேரளாவை சேர்ந்தவர் என்பதால், கேரள முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் அமெரிக்காவில் இருந்து வந்த பெண்ணின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.கேரள  கலாச்சார முறைப்படி பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்புடன் நடைபெற்ற  திருமண விழாவில் பட்டு வேட்டி,புடவை அணிந்து  அமெரிக்க குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

வெளிநாட்டில் வசித்தாலும் தங்கள் கலாச்சாரத்தை மறக்காமல்  திருமணத்தை நடத்தியுள்ள வாசுதேவன் குடும்பத்தினருக்கு  பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…