கோவையில் சாலை விபத்தில் இளைஞர்கள் பலியாவது அதிகரிப்பு

கோவை செப்டம்பர் 17 கோவை மாநகர பகுதியில் விபத்தில் இளைஞர்கள் பலியாவது அதிகரித்துள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதுபோன்ற ஐ.டி. நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களிலும், வெளியூர்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் அதிக திறன் ( சி .சி.) கொண்டதாக இருக்கிறது. அதில் அவர்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது .சிலருக்கு வாகனங்களை ஓட்டி அனுபவம் இல்லாததால் விபத்துகளில் சிக்கி விடுகிறார்கள் .கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை 251 விபத்துக்கள் நடந்தது இதில் 62 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இது 25 சதவீதம் ஆகும். எனவே விபத்துகளை குறைக்க எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 207 விபத்துக்களே நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு விட குறைவு. ஆனால் இந்த விபத்துகளில் 57 இளைஞர்கள் உயிரிழந்து உள்ளனர். இது சராசரியாக 28 சதவீதமாகும். விபத்துக்கள் குறைந்தாலும் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்கி கொடுக்கும் போது பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதி அளித்த 12 பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். வாகனங்கள் ஓட்டும் இளைஞர்களும்,போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.